தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு!

இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

தரங்கம்பாடி மீனவர்கள் ஐந்து பேரை நடுக்கடலில் வைத்து கடுமையாக தாக்கிய இலங்கை கடற்படை வீரர்கள் 12 பேர் மீது வேதாரண்யம் கடலோர குழும  காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் அருண் குமார் மாதவன், காசி, முருகன் ஆகியோர் கடலுக்குச் சென்று நேற்று காலை  கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலை, இஞ்சின் ஆகியவற்றை  பறித்துக் கொண்டதுடன் இரும்பு கம்பியால் கொடூரமாக அவர்கள் மீது  தாக்குதல் நடத்தினர்.

இதில் ஐந்து மீனவர்களும் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு உடலில் ரத்தக் கட்டுகள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இதுகுறித்து  நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.  அனைத்து சர்வதேச விதிமுறைகளையும்  அப்பட்டமாக மீறி வரும் இலங்கை  கடற்படையில் அத்துமீறலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும்,  தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும்,  உயர்மட்ட அளவிலும் தூதரக வழிமுறைகள் மூலமும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர்  கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தரங்கம்பாடி மீனவர்களை தாக்கிய  இலங்கை கடற்படையினர்  12 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் நிலையத்தில்  மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in