7-ம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு திருமணம்: தீட்சிதர்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு!

சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் பெற்றோர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக  சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆறு பேர் மீது சிதம்பரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தங்களுக்குள் தனிப்பட்ட சில மரபுகளை பின்பற்றி வருகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைப்பதும் அந்த மரபுகளில் ஒன்று. இதற்கு சமூகத்தில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து தற்போது சிறுவயது திருமணங்கள் அவர்களால் வெளிப்படையாக நடத்தப்படுவதில்லை. ஆனாலும் மறைமுகமாக திருமணங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இந்த நிலையில் குழந்தை திருமணம் தொடர்பாக  கடந்த மாதத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுமியின் தந்தை, சிறுமியை திருமணம் செய்தவர் உட்பட பலரும் கைது செய்யப்பட்டார்கள்.  தற்போது மேலும் ஒரு சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர்  தில்லை நாகரத்தின தீட்சதர் மகன் பத்ரிசன்(19) என்ற ராம்.  இவருக்கும் திருமண வயது பூர்த்தியடையாத சிறுமி ஒருவருக்கும் கடந்தாண்டு ஜனவரி 25-ம் தேதி சிதம்பரத்தில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த  சிறுமி தற்போது 7-ம் வகுப்பு படிக்கிறார்.  அவருக்கு குழந்தைத் திருமணம் நடந்ததாக கடலூர் சமூக நலத்துறைக்கு புகார் வந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.  இதில் குழந்தை திருமணம் நடந்தது உறுதியானது. இது குறித்து சமூக நலத்துறை மகளிர் ஊர் நல அலுவலர் சித்ரா கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன் பேரில் பத்ரிசன், அவரது பெற்றோர்,  சிறுமியின் பெற்றோர்  உட்பட  6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  திருமணம் செய்து வைக்க உதவியாக இருந்த பத்ரிசனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீஸார்  தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in