தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அரசின் விதிகளை மீறி அதிக உயரத்தில் விநாயகர் சிலை வைத்ததாக ஐந்துக் குழுக்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி, இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பிலும், பல்வேறு ஊர்களில் இளைஞர் அமைப்பினரும் விநாயகர் சிலை வைத்திருந்தனர். இந்த விநாயகர் சிலைகள் நேற்றும், இன்றுமாக விஜர்ஜனம் செய்யப்பட்டன.
அப்போது கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 குழுக்கள் வைத்திருந்த விநாயகர் சிலைகள் விதிகளை மீறி அதிக உயரத்தில் இருந்ததாக புகார் வந்தது. மேலும் அவை அதிக உயரத்துடன் இருந்தது மட்டுமல்லாமல், நீர் நிலைகளை நாசப்படுத்தும் வகையில் அதிகளவு ரசாயனமும் சேர்க்கப்பட்டு, ரசாயன விநாயகராக உருப்பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஐந்து குழுக்களின் மீதும் வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்விவகாரம் இந்து அமைப்புகளை உஷ்ணப்படுத்தியுள்ளது.