ஆபத்தான கைதிகளை கண்காணிக்க வருகிறது கேமரா: முதலில் புழல் சிறையில் அறிமுகம்

ஆபத்தான கைதிகளை கண்காணிக்க வருகிறது கேமரா: முதலில் புழல் சிறையில் அறிமுகம்

தமிழக சிறைகளில் ஆபத்தான கைதிகளை கண்காணிக்க பாடி வோர்ன் கேமராக்கள் வைக்கப்படுகிறது. 46 லட்ச ரூபாய் செலவில் 50 பாடி வொர்ன் கேமராக்கள் வாங்கியுள்ளதாக சிறைதுறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச்சிறைகள், 5 பெண்கள் சிறப்பு சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளிகள், தலா 3 திறந்தவெளி சிறைகள், சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு படிப்பு, தொழில் என பல வசதிகள் சிறைத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி பொறுப்பேற்ற பிறகு சிறைக்கைதிகளுக்காக பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

சிறை கைதிகளை சந்திக்க வரும் அவரது உறவினர்களிடம் எளிமையாக பேசும் வகையில் இன்டர்காம் வசதியும், சிறைக்கைதிகள் வெளியே சென்றவுடன் எளிதாக வேலை கிடைக்கும் வகையில் ஆதார் கார்டு வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது முதல்முறையாக தமிழக சிறைகளில் ஆபத்தான கைதிகளை கண்காணிக்க 46 லட்ச ரூபாய் செலவில் 50 பாடி வோர்ன் கேமராக்கள் தமிழக சிறைத்துறையினரால் வாங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறைகளில் ஆபத்தான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பிளாக்கில் சுற்றுக்காவல் செல்லும் காவலர்களுக்கு பாடி வோர்ன் கேமராக்கள் வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக மத்திய புழல் சிறையில் பாடி வோர்ன் கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்தக்கட்டமாக ஒரு வாரத்தில் அனைத்து 9 மத்திய சிறைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடி வோர்ன் கேமராவின் லைவ் காட்சிகள் எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை காவலர்கள் ரோந்து பணிக்காக பாடி வோர்ன் கேமராவை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது சிறை காவலர்கள் பாடி வோர்ன் கேமராவை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in