சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க செயினை சபரிமலை ஐயப்பனுக்கு காணிக்கையாகக் கொடுத்துள்ளார். அவர் தன் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கூட அறிவிக்கவில்லை.
கோயிலுக்கு ஒரு டியூப்லைட் வாங்கிக் கொடுத்துவிட்டே அதில் தங்கள் பெயரை எழுதிக்கொள்ளும் காலம் இது. இப்படியான சூழலில் கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 45 லட்ச ரூபாய்க்கு நகையை வாங்கிக்கொடுத்த பக்தர் ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமலே சென்ற ஆச்சர்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாள்களும் இந்தக் கோயில் திறக்கப்பட்டு, பூஜைகள் நடப்பது வழக்கம். அந்தவகையில் ஆவணிமாத பூஜைக்காக நேற்றுவரை சபரிமலை திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சாமி தரிசனத்திற்கு வந்த கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட பக்தர் ஒருவர், நைஷ்டிக பிரம்மச்சாரி கோலத்தில் அருள்பாலிக்கும் சபரிமலை ஐயப்பனுக்கு தங்க செயின் ஒன்றைப் போட்டார். இந்த செயின் 107.75 பவுன் எடை இருந்தது. இதன் மதிப்பு 44 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயாகும். இப்போது வெளிநாட்டில் வேலைபார்க்கும் அந்தக் கேரள பக்தர் தன் பெயர் உள்ளிட்ட எந்த அடையாளங்களையும் வெளிப்படுத்தவேண்டாம் என்னும் நிபந்தனையுடன் இந்த நகையைக் கொடுத்துள்ளார்.