முன்னாள் மனைவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர், இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள நூறு குழந்தைகளுக்கு சுத்தமான மற்றும் தரமான 200 பர்கர்கள் வழங்க வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், தன் முன்னாள் கணவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வதாக 2020-ம் ஆண்டில், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் அந்த பெண்ணின் முன்னாள் கணவர் மீது டெல்லி காவல்துறையினார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அப்போது அவரது முன்னாள் மனைவி தன் சொந்த விருப்பத்தின் பேரில் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜஸ்மீத் சிங் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு நேற்று விசாரணை செய்தது. இந்த வழக்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதாகவும், காவல்துறை மற்றும் நீதித்துறையின் நேரத்தை வீணடிப்பததாகவும் கூறிய அமர்வு, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குப் பதிவை ரத்து செய்ய வேண்டுமென்றால், இரண்டு ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குறைந்தது நூறு குழந்தைகளுக்கு நல்ல சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட பர்கரை வாங்கிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அத்துடன் பர்கர்கள் சுத்தமான சூழலில் சமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தவிர, புகார்தாரரின் முன்னாள் மனைவிக்கு ரூ.4.5 லட்சம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் நொய்டா மற்றும் மயூர் விஹாரில் பர்கர் கடைகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.