மாநகரப் பேருந்தில் நடத்துநர், பெண் பயணி கைகலப்பு : வேகமாகப் பரவும் வீடியோ

மாநகரப் பேருந்தில் நடத்துநர், பெண் பயணி கைகலப்பு : வேகமாகப் பரவும் வீடியோ

சென்னை மாநகரப் பேருந்தில் நடத்துநர் மற்றும் பெண் பயணி ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் மாறி, மாறி தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (30). இவர், நேற்று முன்தினம் வியாசர்பாடி கணேசபுரம் பேருந்து நிறுத்தத்தில் பெரம்பூர் செல்வதற்காக, பாரிமுனையிலிருந்து பெரியார் நகர் சென்ற மாநகர பேருந்தில் ஓடிச்சென்று ஏறினார். இதைக் கண்ட பேருந்து நடத்துநர் செல்வக்குமார் அனிதாவை கண்டித்தார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் சண்டையிட்டு கொண்டே பேருந்தில் பயணம் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த நடத்துநர் செல்வகுமார் பெரம்பூர் பேருந்து நிலையம் வந்ததும், அந்தப் பெண்ணை பேருந்திலிருந்து கீழிறங்குமாறு கூறினார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த பெண், நடத்துநரைத் தாக்கினார். பதிலுக்கு நடத்துநர் செல்வகுமாரும் அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். இருவரும் தொடர்ந்து மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். இதையடுத்து செம்பியம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் செம்பியம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நடத்துநர் செல்வகுமார் மற்றும் அனிதா ஆகிய இருவரிடமும் புகார்கள் பெறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்து வரும் நிலையில், இருவரும் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in