கேரளத்தில் மதரஸா வகுப்பிற்குச் சென்றுவந்த சிறுமியை அந்த வழியாக வந்த வாலிபர் தடுத்து நிறுத்தி கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மஞ்சேஸ்வரத்தில் மதரஸா எனப்படும் இஸ்லாமிய மார்க்க கல்விக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு சென்றுவிட்டு 8 வயது சிறுமி ஒருவர் வெளியே வந்தார். அப்போது எதிரில் வந்த வாலிபர் ஒருவர் அந்த சிறுமியை தூக்கி தரையில் ஓங்கி அடித்தார். இதில் சிறுமியின் வயிறு உள்பட பல இடங்களிலும் கடுமையான காயம் ஏற்பட்டது. சிறுமி அழுதுகொண்டே தன் வீட்டில் போய் நடந்தவற்றை சொன்னார். உடனே சிறுமியின் குடும்பத்தினர் வந்து மதரஸாவில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்தனர். இதில் அந்த சிறுமி மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அபுபக்கர் எனத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மஞ்சேஸ்வரம் போலீஸார் அபுபக்கர் மீது தன்னிச்சையாக காயப்படுத்துதல் பிரிவு 323, 354, கொலை முயற்சி 307, போக்சோ உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு கைது செய்தனர். ஆனால் அபுபக்கர் சிறுமியை எதற்காக தாக்கினார் என போலீஸ் விசாரணையில் இதுவரை தெரிவிக்கவில்லை. சிறுமிக்கும் தன்னை அவர் ஏன் தாக்கினார் எனத் தெரியவில்லை. கேரளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 வயதான சிறுவனை காரில் சாய்ந்ததற்காகக் கொடூரமாகத் தாக்கிய வாலிபரை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.