
பிரிட்டன் தூதரக ஊழியராக பணியாற்றியபடி, ரஷ்யாவுக்கும் உளவாளியாக செயல்பட்டவருக்கும் பிரிட்டன் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்திருக்கிறது.
ஜெர்மனியின் பெர்லினில் செயல்படும் பிரிட்டன் தூதரகத்தின் பாதுகாவலர்களில் ஒருவராக பணியாற்றியவர் டேவிட் ஸ்மித். பிரிட்டன் விமானப்படையில் 12 ஆண்டுகள் கடமையாற்றியதன் அடிப்படையில், பெர்லினில் இவருக்கு பணி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், ஜெர்மனி - பிரிட்டன் இடையிலான ரகசியத் தகவல்கள் பலவும் ரஷ்யாவுக்கு செல்வதாக இருநாட்டு அதிகாரிகள் மத்தியில் ஐயம் எழுந்தது. இதன் அடிப்படையில் போலியான ரகசிய கோப்பு ஒன்றினை தயாரித்து, அதனை பொறியாக தங்களுக்குள் பரிமாறி வந்தனர். அதிலிருந்த டம்மி ரகசியங்களும் ரஷ்யாவுக்கு செல்லவே, அதனடிப்படையில் பெர்லினில் செயல்படும் பிரிட்டன் தூதரகத்தின் பாதுகாவல் பணியிலிருந்து டேவிட் ஸ்மித் கைதானார்.
இரவுப் பணியின்போது எவரும் தூதரகத்தில் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு, அலுவலகத்தில் ஊடுருவிய ஸ்மித் ரகசியம் என குறிப்பிடப்பட்ட கோப்புகளை எல்லாம் நகலெடுத்து ரஷ்யாவுக்கு பரிமாறி இருக்கிறார். சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக பிரிட்டன் தூதரகத்தில் இருந்து பல்வேறு ராஜீய ரகசியங்கள் ரஷ்யாவுக்கு கடத்தப்பட்டிருக்கின்றன. 2021ல் அவர் கைது செய்யப்பட்டு, லண்டன் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது. வழக்கின் நிறைவாக டேவிட் ஸ்மித்துக்கு, தேச துரோக குற்றச்சாட்டுகளின் கீழ் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.