பிரிட்டனில் 18 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கணக்கு பாடம் கட்டாயம் என அறிவித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்.
பிரிட்டனின் கல்வித் தரம் உலக பிரசித்தி பெற்றது. பள்ளி முதல் கல்லூரி வரை பல்வேறு நிலைகளிலும் அங்கு கல்விக்காக சென்று சேருவோர் அதிகம். அண்மைக் காலமாக இந்த நிலை மாறி வருகிறது. பெரியவர்கள் மத்தியில் அடிப்படை கல்வி தொடர்பான இடர்பாடுகள் அதிகம் தென்படுவது தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
குறிப்பாக சுமார் 80 லட்சம் பிரிட்டீஷார் மத்தியில் பொதுவான கணக்கு பகுப்பாய்வு திறன்கள், தொடக்கப்பள்ளி மாணவருக்கான அளவிலே இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் 16 - 19 வயதிலான பிரிட்டன் மாணவர்களில் சரிபாதி எண்ணிக்கையில் கணக்கை ஒரு பாடமாக எடுத்து படிப்பதை தவிர்த்து வருகின்றனர். இவற்றை மேற்கோள்காட்டியே புதிய அறிவிப்பினை பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார்.
இதன்படி பள்ளிகளில் கணித பாடங்கள் மற்றும் அதன் திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் அமல்படுத்தப்படும். மேலும் 18 வயது வரையிலான மாணவர்களின் பாடங்களில் கணிதம் கட்டாயமாக இடம்பெறும். இந்த புதிய ஏற்பாட்டுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கோரியுள்ளார்.