
சாலை விபத்தில் தன் காதலன் உயிர் இழந்ததை நினைத்துக் காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சகாய ஜான்சிலா(21). இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் மூன்றாமாண்டு படித்துவந்தார். இவர் தன் வீட்டுக்குளியல் அறையில் திடீரென தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சகாய ஜான்சிலாவின் குடும்பத்தினர் வடசேரி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து மாணவி சகாய ஜான்சிலா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் கல்லூரி மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவி சகாய ஜான்சிலா ஒரு வாலிபரை உயிருக்கு, உயிராக காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் அந்த வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார். அப்போது இருந்தே சகாய ஜான்சிலா மிகுந்த சோகமாக இருந்தார். யாரிடமும் பேசவும் இல்லை. இந்த நிலையில் அந்த சோகமிகுதியில் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
காதலனின் பிரிவைத் தாங்காமல் காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.