அதிமுகவை உடைத்ததில் பாஜகவுக்கு பெரும் பங்கு உள்ளது: துரைவைகோ பேட்டி

துரை வைகோ
துரை வைகோ

அதிமுகவை உடைத்ததில் பாஜகவுக்கு பெரும் பங்கு இருப்பதாக மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டினார்.

மதுரையில் திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரு உருவச் சிலைக்கு துரை வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறியதாவது, “பாரம்பர்யம்மிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு நாளுக்கு, நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

ஆட்சிக் கட்டிலில் இருந்து தமிழகத்தை ஆண்ட அதிமுக இன்று இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகின்றது. அந்தக் கட்சியை உடைத்ததில் பாஜகவுக்கு பெரும் பங்கு உள்ளது. ஆனால் இன்று பாஜகவினரே அதிமுகவைப் பலப்படுத்துவோம் என்றும் பேசிவருகின்றனர். அண்மையில் நீதிமன்றம் தமிழகத்தில் புகையிலை, குட்காவிற்கான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளது. விரைவில் தமிழகத்தில் நிரந்தரமாக புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in