
கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் நலமுடன் உள்ளனர். தொழில் நிறுவன உரிமையாளர்கள் அவர்களை பாதுகாப்புடன் வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையுடன் இணைந்து சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் தெரிவித்துள்ளார்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார், சிறப்பு பணி படை வீரர் சூப்பிரண்டு சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மற்றும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்பி பத்ரி நாராயணன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கோவை மாவட்ட தொழிலாளர் துறை அலுவலர்கள், தொழிற்சங்கங்கள், சிறு குறு தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள், வருவாய் அலுவலர்கள் மற்றும் பலர், வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் நிலவி வரும் அச்சம் தொடர்பாக கலந்துரையாடினார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பீகார் குழுவினருக்கு அதிகாரிகள் வாயிலாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. தொழில்நிறுவனங்களை சார்ந்தவர்கள் பீகார் குழுவினருடன் கலந்துரையாடினார்கள். அப்போது, பீகாரில் உள்ள ஊடகங்கள் வாயிலாக தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பின்னர் பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..., “கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். வடமாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களிடம் பல மணி நேரம் கலந்துரையாடினோம். அவர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தோம். கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் நலமுடன் உள்ளனர். தொழில் நிறுவன உரிமையாளர்கள் அவர்களை பாதுகாப்புடன் வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையுடன் இணைந்து சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தொழிலாளர்கள் எங்களிடம் பேசுகையில், ‘‘நாங்கள் இங்கு நலமாக உள்ளோம் ஆனால் வாட்ஸ் ஆப்களில் வரும் வீடியோக்கள் மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஊரில் உள்ள பெற்றோர் உடனே இங்கு கிளம்பி வா என்கிறார்கள்,’’ என்றனர்.
அந்த வீடியோக்கள் வெறும் வதந்திதான் என அவர்களுக்கு புரிய வைத்துள்ளோம். எங்களது ஆய்வு திருப்திகரமாக இருந்தது. தமிழக அரசு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியது. நாங்கள் பீகார் சென்றதும் எங்களது ஆய்வு அறிக்கைகளை ஊடகங்களுக்கு தெரிவிப்போம். தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் பீகாரில் உள்ள பெற்றோர்கள் இதன் மூலம் விழிப்புணர்வு அடைவார்கள். வதந்திகளை அவர்கள் நம்பமாட்டார்கள். இங்குள்ள தொழில் நிறுவனங்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்ளுவது என்னவென்றால். தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம், அவர்கள் நன்றாக உள்ள நிலையை பேசவைத்து அவர்களை அவர்களது நண்பர்களான வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் வாட்ஸ் ஆப்பிற்கு அந்த வீடியோக்களை அனுப்ப வேண்டும். அப்போது வதந்திகளுக்கு முழு முற்று புள்ளி வைக்க முடியும்” இவ்வாறு அவர் கூறினார்.