
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கந்தூரி விழாவை முன்னிட்டு இன்றும், டிச.4- ம் தேதியும் மதுபானக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் உள்ள புகழ்பெற்ற தர்காவில் பெரிய கந்தூரி விழா இன்று தொடங்கி டிசம்பர் மாதம் 8-ம் தேதி வரை 14 தினங்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சந்தனக்கூடு விழா டிசம்பர் 4-ம் தேதி நள்ளிரவு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு டிசம்பர் 5-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இந்த தர்காவின் கந்தூரி விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இங்கு வந்து வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் சந்தனக்கூடு விழா நடைபெற உள்ள டிச 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.