நித்யானந்தா போல் இருப்பதால் தனது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளதாகச் சாமியார் ஒருவர் பரபரப்பு கிளப்பி இருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் நிலையத்துக்கு நேற்று சொகுசு காரில் நித்யானந்தா தோற்றத்தில் சாமியார் ஒருவர் வந்தார். அவர் பெயர் பாஸ்கரானந்தா. கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கரானந்தா சுவாமி. இவர் பார்ப்பதற்கு நித்யானந்தாவைப் போல இருப்பார். கடந்த 30 ஆண்டுகளாக ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு வருகிறார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்குச் சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தை ஒரு கோடியே 50 லட்சம் பணம் கொடுத்து குத்தகைக்கு பாஸ்கரானந்தா எழுத்துள்ளார். அந்த நிலத்திற்கு வங்கிக் கடன் பெற்றிருப்பது தெரியாமல், கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் அந்த இடத்தை கடன் கொடுத்த வங்கி ஜப்தி செய்தது.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி இரவு கோயில் கட்டிடங்கள் மற்றும் அன்னதான கூடங்கள் மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டு வெளியூர் சென்றிருந்த பாஸ்கரானந்தா ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே அந்த ஆசிரமத்தில் தனது அறையில் வைக்கப்பட்ட வைர நகைகள் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டவை காணாமல் போனதாகப் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.