உயிருக்குப் போராடிய நோயாளி - போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கார்: 3 கி.மீ தூரம் ஓடியே மருத்துவமனைக்குச் சென்ற மருத்துவர்!

உயிருக்குப் போராடிய நோயாளி - போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கார்: 3 கி.மீ தூரம் ஓடியே மருத்துவமனைக்குச் சென்ற மருத்துவர்!

உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்காகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர் 3 கி.மீ. தொலைவிற்கு ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூரு பகுதியைச் சேர்ந்த இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் கோவிந்த நந்தகுமார். சர்ஜாபூரில உள்ள மணிப்பால் மருத்துவமனையில், நோயாளி ஒருவருக்கு லேப்ராஸ்கோப்பிக் முறையில் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்ய காரில் சென்று கொண்டிருந்தார். மருத்துவமனைக்கு சில கி.மீ தொலைவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். மருத்துவமனை செல்ல பத்து நிமிடங்கள் கூட ஆகாத தொலைவு இருந்தாலும், கூகுல் மேப் அவருக்கு 45 நிமிடங்கள் வரை பயணநேரம் ஆகலாம் எனத் தெரிவித்தது. இது நோயாளிக்கு மோசமான நிலையை ஏற்படுத்தலாம் என்பதால், காரிலிருந்து இறங்கிய அந்த மருத்துவர் ஓடியே மருத்துவமனை செல்ல முடிவெடுத்தார். இதைத்தொடர்ந்து 3 கி.மீ. தொலைவிற்கு ஓடியே மருத்துவமனைக்குச் சரியான நேரத்தில் சென்றார்.

இது குறித்து மருத்துவர் கோவிந்த நந்தகுமார் கூறுகையில், “நல்லவேளையாக கார் ஓட்டுநர் இருந்ததால் காரை அவரிடம் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பினேன். நான் ஒரு தீவிர உடற்பயிற்சியாளர் என்பதால், சாலையில் ஓடுவது என்பது எளிதாகவே இருந்தது. இப்படி இறங்கி நடப்பது எனக்கு புதிதான ஒன்று அல்ல. பல நேரங்களில் இது போன்று அவசர நிலை ஏற்படும் போது மருத்துவமனைக்கு ஓடி இருக்கிறேன். ரயில் தண்டவாளங்களைக் கூட இப்படிக் கடந்து ஓடியிருக்கிறேன். நான் திடகாத்திரமாக இருப்பதால் என்னால் இதைச் செய்ய முடிகிறது. ஆம்புலன்ஸில் நோயாளியுடன் காத்திருக்கும் உறவினர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். ஆம்புலன்ஸிற்கு கூட வழிவிட இந்த நகரில் இடமில்லை” என்கிறார். மருத்துவரின் இந்த செயலுக்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in