மொபைல் பே செயலிக்கு அதிரடி தடை: கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மொபைல் பே செயலிக்கு அதிரடி தடை: கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

வர்த்தக சின்னம் பிரச்சினை தொடர்பாக ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான ஃபோன் பே நிறுவனம் மொபைல் பே நிறுவனத்தின் செயலி தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போல உள்ளதால் மொபைல் பே செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்த மனுவில், மொபைல் பே செயலியின் லோகோ, ஃபோன் பே செயலியின் லோகோ போல் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், இரு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக கூறி, மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அனுமதித்த நீதிபதி, இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குவது தொடர்பான ஃபோன் பே கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in