`தினமும் பஸ்சில் வர சிரமமாக இருந்ததால் `பைக்'கை திருடினேன்'- ஜாமீனில் வந்த கொலை குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்

கைதான பார்த்தசாரதி
கைதான பார்த்தசாரதி

தினமும் பேருந்தில் வந்து கைழுத்திடுவது சிரமமாக இருந்தால் பைக்கை திருடியதாக ஜாமீனில் வெளியே வந்த கொலை குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மந்தவெளி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(40). இவர் அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்த தினேஷ் ஸ்பென்சர் பிளாசா வளாக பார்க்கிங்கில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் இரவு வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸார் ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் காணாமல் போன இருசக்கர வாகனத்தின் புகைப்படம் மற்றும் சிசிடிவியில் பதிவான குற்றவாளியின் புகைப்படம் ஆகியவற்றை தினேஷ் தங்களது வியாபார ரீதியிலான வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டு, தனது இருசக்கர வாகனம் திருடு போய் விட்டதாகவும் அது பற்றி தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்குமாறு பதிவிட்டிருந்தார். இவரது பதிவை பார்த்து சிலர் அவரது வாகனம் நெற்குன்றம் அண்ணாநகர் பகுதிகளில் சுற்றுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 28-ம் தேதி இரவு 11 மணியளவில் அண்ணாநகர் டவர் பார்க் அருகே காணாமல் போன இருசக்கர வாகனம் இருப்பதாக தினேஷுக்கு தகவல் கிடைத்து. உடனே தினேஷ் தனது நண்பர்களோடு அங்கு சென்று பைக் திருடி சென்ற நபரை கையும் களவுமாக பிடித்து வைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போலீஸார் குற்றவாளியை பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி(23) என்பதும் பி.காம் பட்டதாரியான இவர், அண்ணாசாலையில் தாஸ் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்று விட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்ததாகவும், தினமும் அண்ணாசாலை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு செல்ல வேண்டும் என நீதிபதி உத்தரவின் பேரில் தினமும் கையெழுத்திட்டு வந்தது தெரியவந்தது. அவ்வாறு தினமும் கைழுத்திட பேருந்தில் வந்து செல்ல 3 மணி நேரத்திற்கும் மேல் ஆவதால் உடல் சோர்வடைந்து விடுவதாகவும் எனவே சம்பவத்தன்று காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு பின்னர் காவல் நிலையம் எதிரே உள்ள ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் திருடிய வாகனத்துடன் காவல் நிலையத்திற்கு வந்தால் சிக்கி கொள்வேன் என்பதை உணர்ந்து பைக்கை தெருவில் நிறுத்திவிட்டு காவல் நிலையத்துக்கு வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் சம்பவம் நடந்த இடம் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் பார்த்தசாரதியை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in