கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் அருள்மொழி (30). இவருடைய கணவர் சதீஷ் (34), கழுகுமலை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் நேரடியாக தேர்ச்சி பெற்று பணியாற்றி வருகின்றனர்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அருள்மொழிக்கு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சக போலீஸார் சார்பில் வளைகாப்பு விழா நடத்ததப்பட்டது. அருள்மொழிக்கு வளையல்கள் அணிவித்து சந்தனம், குங்குமமிட்டு, சீர்வரிசை பொருட்கள் மற்றும் அறுசுவை உணவை போலீஸார் வழங்கினர்.
இந்த நிகழ்வில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், காவல் ஆய்வாளர்கள் பத்மாவதி, சுஜீத் ஆனந்த், மங்கையர்கரசி உள்பட பலர் கலந்து கொண்டு சதீஷ் தம்பதியரை வாழ்த்தினர்.