குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: தாயின் முறைதவறிய தொடர்பால் நடந்த விபரீதம்
ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக குழந்தையின் தாயும், அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை(31). இவரது மனைவி துர்கா தேவி(26). கருத்து வேறுபாட்டினால் இந்த தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். இந்தத் தம்பதியின் ஒன்றரை வயதான பெண் குழந்தை தாய் துர்கா தேவியின் அரவணைப்பில் வளர்ந்துவந்தது. கணவரைப் பிரிந்த துர்காதேவி சிலுக்குவார்பட்டியில் உள்ள தன் உறவினர் பாலு என்பவரது தோட்டத்து வீட்டில் குழந்தையுடன் தங்கினார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு அங்குள்ள கிணறு ஒன்றில் விழுந்து குழந்தை உயிர் இழந்தது. இதுதொடர்பாக சிலுக்குவார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தையின் தாய் துர்கா தேவிக்கும், தோப்புபட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜய்(21) என்பவருக்கும் முறை தவறிய காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தனிமையில் சந்தோசமாக இருக்க காட்டுப்பகுதிக்குச் சென்றபோதுதான் குழந்தை கிணற்றில் விழுந்து உயிர் இறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையை கவனக்குறைவாக இருந்து மரணிக்க காரணமாக இருந்த துர்கா தேவி, அஜய் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.