மதுரை அருகே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போ்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு தகுதி சான்று வழங்கும் பணி தொடங்கியது.
மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை பரிசோதனை செய்து தகுதி சான்று வழங்கும் பணியில் கால்நடை துறையினர் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு சர்வதேச புகழ் வாய்ந்ததாகும். இவற்றை காண தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவதுண்டு. இந்நிலையில், தை முதல் நாள் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.
களத்தில் துள்ளி குதித்து வீரத்தை நிருபிக்கும் காளைகளை கால்நடை துறையினர் பரிசோதித்து தகுதி சான்று வழங்குவது நடைமுறை. இதன்படி, போட்டிக்கு தயார் படுத்திய காளைகளின் தகுதி பரிசோதனை முகாம் திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் இன்று நடந்தது. காளைகளின் கருவிழி, கொம்புகளின் இடைவெளி, உயரம் தொடர்பாக பரிசோதனையும் நடந்தது.