நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வெல்டிங் மிஷின் கொண்டு ஜன்னல் கம்பியைத் துண்டித்து நடைபெற்ற கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததால் பல கோடி மதிப்பிலான நகைகள் தப்பின.
வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்குப் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இங்கு 1800-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அடகுவைத்து உள்ளனர். அதுமட்டுமில்லாமல் 14 லட்சம் ரூபாய் ரொக்கம் இருப்பு உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அதிகம் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள், ஜன்னல் கம்பியை வெல்டிங் மெஷின் கொண்டு உடைத்து வங்கியின் உள்ளே புகுந்தனர். அத்துடன் வங்கியின் இரண்டு பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். மேலும் லாக்கரை உடைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டபோது வங்கியின் காவலாளி முத்துகண்னு வந்துள்ளார்.
இதை பார்த்த கொள்ளையர்கள் வங்கி காவலாளியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால் வங்கியில் இருந்த சுமார் 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும் 14 லட்சம் ரொக்கமும் தப்பியது. தகவலறிந்து பொதுமக்கள் வங்கியில் முன்பு திரண்டனர். கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், செயலாளர் அசோக் ஆகியோர் வங்கிக்குள் சென்று அனைத்தையும் சரி பார்த்து வட்டு வங்கியில் கொள்ளை எதுவும் போகவில்லை எனவும் நகைகள், பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்தனர்.
இதனால் நிம்மதியடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். கொள்ளையர்கள் வெல்டிங் கியாஸ் சிலிண்டரை அங்கேயே விட்டுச் சென்று உள்ளனர். மேலும் சிசிடி ஒயர்களை அறுத்தும், கணினி ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்றும் உள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா தலைமையிலான வாய்மேடு காவல் நிலைய போலீஸார் கொள்ளை முயற்சி நடந்த வங்கிக்கு வந்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.