பணியில் இருந்த ரயில்வே பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயற்சி: தென்காசியில் பரபரப்பு

பாவூர் சத்திரம் ரயில்வே கேட்
பாவூர் சத்திரம் ரயில்வே கேட்பணியில் இருந்த ரயில்வே பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயற்சி: தென்காசியில் பரபரப்பு

இரவு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பெண் ஊழியரை மர்மநபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள தென்காசி - நெல்லை நெடுஞ்சாலைக்கு இடையே ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டில் நேற்று இரவு கேட் கீப்பராக கேரளாவைச் சேர்ந்த நித்யா சந்திரன் ( 33) என்ற பெண் பணியாற்றினார். சுமார் இரவு 8.30 மணிக்கு திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் அந்த பகுதியை கடந்த பின்பு கேட் கீப்பர் ஒய்வு எடுக்கும் அறையின் ஒருபுறக் கதவை நித்யாசந்திரன் அடைத்துவிட்டு உள்ளே ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இதை நோட்டமிட்டு கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர், அறைக்குள் புகுந்து நித்யா சந்திரனை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். திடீரென ஒரு நபர் உள்ளே புகுந்து தன்னை மானபங்கப்படுத்த முயற்சி செய்த சம்பவம் அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவர் கூச்சலிட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தவுடன் மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாவூர்சத்திரம் போலீஸார் அந்த பகுதியில் வேறு யாரேனும் சந்தேகப்படுபடியான நபர்கள் உள்ளார்களா எனத் தேடிப் பார்த்தனர். ஆனால், யாரும் போலீஸார் பிடியில் சிக்கவில்லை. ரயில்வே பணியாளரான அந்த பெண்ணை போலீஸார் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே பெண் ஊழியரை மர்மநபர், பலாத்காரம் செய்ய முயற்சி செய்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in