தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியதாக 2 பெண்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதை ஊரைச் சேர்ந்த மாணவன் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவி பயின்று வருகிறார். நேற்று முன்தினம் வகுப்பில் அந்த மாணவர், மாணவி மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதையடுத்து ஆசிரியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அந்த மாணவியின் தாயார், மற்றொரு பெண்மணியுடன் சேர்ந்து பள்ளி வகுப்புறைக்குள் புகுந்து அந்த மாணவரை செருப்பால் அடுத்து தாக்கியதாகவும், சாதியைப் பற்றி அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. காயம் அடைந்த அந்த மாணவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் பிரச்சினை தொடர்பாக நாலாட்டின்புதூர் போலீஸார், மாணவியின் தாய் மற்றும் அவருடன் வந்த பெண்மணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ்யிடம் மனு அளித்துள்ளனர்.
வகுப்புறைக்குள் தாக்குதல் நடத்திய போது ஆசிரியர்கள் தடுக்கவில்லை என்றும், வெளியே சென்று அடிக்க சொன்னதாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.