நகையைக் கழட்ட முடியாதால் மூதாட்டியின் காதை கொள்ளையன் அறுத்துச் சென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டம் தரங்காவில் உள்ள ரயில் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்பாய் ஸ்ரீராம் பாட்டில்(70). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த மங்கள்நாத் பாட்டீல் என்பவரது கொட்டகையில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு இவரது வீட்டிற்குள் கொள்ளையன் நுழைந்தான். அப்போது விமல்பாய் ஸ்ரீராம் பாட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்.
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் மூதாட்டியை கடுமையாக தாக்கினான். இதில் விமல்பாய் ஸ்ரீராம் பாட்டிலுக்கு முகம், தலை பகுதியில் காயம் ஏற்பட்டது. அப்போது அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையன் கழட்டித்தரச் சொல்லியுள்ளான். அப்போது மூதாட்டி காதில் அணிந்திருந்த நகையைக் கழட்ட முடியவில்லை. இதனால் மூதாட்டியின் காதை அறுத்ததுடன் அவர் அணிந்திருந்த 25 ஆயிரம் மதிப்புள்ள நகைகைளைத் திருடிக்கொண்டு கொள்ளையன் தப்பியோடி விட்டான்.
இன்று காலை 9 மணியாகியும் மூதாட்டி வீட்டை வெளியே வரவில்லையே என்று அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது, மூதாட்டி மயங்கிக் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்ரண்ட் சந்திரகாந்த் காவ்லி தலைமையில் வந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக மூதாட்டியின் காது அறுக்கப்பட்ட சம்பவம் ஜல்கான் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.