அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் திடீர் உத்தரவு

அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர்  பணியிடங்கள்:  தமிழக அரசுக்கு ஐகோர்ட் திடீர் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், " ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு அறிவிப்பு கடந்த 2019 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த பலர் விண்ணப்பித்ததாகவும், ஆனால் தேர்வு வாரியத்தில் அந்த தேர்வு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதுவரை பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 167 கலை, அறிவியல் கல்லூரிகள் 51 பாலிடெக்னிக்குகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் சுமார் 10 ஆயிரம் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிள்ள மனுதாரர்கள், கடந்த 12 ஆண்டுகளாக இந்த பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 1020 பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர் .பதவியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வேலைப்பளு அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுவதாகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் பள்ளி கல்வித்துறை சார்ந்தவர்களாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் . ஒரே ஒரு இணை இயக்நனர் அந்தஸ்தில் உயர் கல்வித்துறை சார்பில் உறுப்பினர் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக உயர்கல்வித்துறை சார்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, உதவி பேராசிரியர் பணியிடங்கள், ஆண்டு கணக்கில் நிரப்பப்படாத காரணத்தால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக என்ன நிலை என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவ. 25-ம்தேதி ஒத்தி வைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in