ஆவின் நிறுவனத்தில் துணை மேலாளர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ 10 லட்சத்தை அபகரித்த நபரை அரியலூர் போலீஸார் கைது செய்தனர்.
அரியலூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரை அனுகிய அசோக்குமார் என்பவர், ஆவின் நிறுவனத்தில் துணை மேலாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அதனை செந்தில்குமாருக்கு வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதற்கு ரூ 10 லட்சம் தருமாறும் கோரியுள்ளார்.
அசோக்குமாரின் பேச்சை நம்பிய செந்தில்குமார், ஆவினில் துணை மேலாளர் பணியை பெறுவதற்கு முதல் தவணையாக ரூ. 2 லட்சமும் பின்னர் இரண்டாம் தவணையாக ரூ.8 லட்சத்தினையும் அசோக்குமாரிடம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட அசோக்குமார், 3 மாதங்களில் பணி நியமன ஆணை வரும் என கூறியுள்ளார். ஆனால் அசோக்குமார் கூறியபடி 3 மாதங்கள் ஆன பிறகும் பணி ஆணை எதுவும் வரவில்லை. இதனால் அதிர்ச்சிக்குள்ளான செந்தில்குமார், இது குறித்து அசோக்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி சமாளித்து வந்த அசோக்குமார், ஒரு கட்டத்தில், செந்தில்குமாரின் நெருக்கடி தாங்காமல், பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பணத்தை இழந்த செந்தில்குமார் இது குறித்து அரியலூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை அபகரித்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்த அசோக்குமாரை கைது செய்தனர்.