புளிச்சைக் கீரை செடி என நினைத்துத் தண்ணீர் கேனில் மண்ணை நிரப்பிக் கஞ்சா செடி வளர்த்து வந்தவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுசாமி. கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் இவர் வீட்டில் வீணாகிப் போன தண்ணீர் கேனில் மண்ணை நிரப்பி ஒரே ஒரு கஞ்சா செடி வைத்து வளர்த்து வந்துள்ளார்.
கண்ணுசாமி கஞ்சா செடி வளர்ப்பது குறித்து அரசல் புரசலாக வெளியே தெரிய வர இதுகுறித்துச் சிவகாஞ்சி போலீஸாருக்கும் தகவல் தெரிந்தது. இதனையடுத்த பல்லவர் மேட்டில் உள்ள கண்ணுசாமி வீட்டிற்குச் சென்று போலீஸார் விசாரணைச் செய்தப் போது அவரது குடும்பத்தினர் புளிச்சைக் கீரை செடி என நினைத்து வளர்த்து வருவதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து வந்த கார் ஓட்டுநர் கண்ணுசாமியை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.