தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்தை கிண்டலடித்து ட்விட்டரில் வீடியோ பகிர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திமுக தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வீடியோ வெளியிடப்படுவதாக மகளிர் ஆணையத்தலைவி போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் ட்விட்டர் வலைதளம் உட்பட சமூக வலைதளங்களை சைபர் க்ரைம் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த சுந்தர் என்கிற இளைஞர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞர் மீது ஐபிசி 153, 505(1)(பி), 509 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். மேலும் அரசின் திட்டங்களை விமர்சிக்கும் சமூக வலைதளக் கணக்குகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளனர்.