
அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்த மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகன் சுப்பிரமணியன்(40). இவர் கடந்த 2021-ம் ஆண்டு தனது வீட்டுக்கு அருகில் வசித்துவந்த 15 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். அதனையடுத்து அந்த சிறுமிகளின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், சுப்பிரமணியன் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை அடிப்படையில் அவரை கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், சுப்பிரமணியன் குற்றவாளி என்பதை உறுதி செய்து குற்றவாளி சுப்பிரமணியனுக்கு14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி சுப்பிரமணியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.