
எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அறுபது வயது முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது அரியலூர் நீதிமன்றம்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த திருக்களப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன்(60). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்தாண்டு (ஜன.2022) கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், இளங்கோவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கு அரியலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஆனந்தன், இளங்கோவனுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 60 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தார். மேலும், சிறுமிக்கு அரசு 2 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து இளங்கோவன் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ம.ராஜா ஆஜராகி குற்றவாளியின் குற்ற செயல்களை நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை பெற்றுத் தந்துள்ளமைக்கு காவல் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.