தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் நியமனம்: ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் நியமனம்: ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்

பிற்படுத்தப்பட்டவர்களுக்காக சுயநலமற்று பணியாற்றவர்களைக் கண்டறிவது, சமூக அரசியல் ரீதியாக அவர்களின் பணி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தான் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவரை நியமிக்க முடியும் என்றும், நியமனங்களை மேற்கொள்ள காலக்கெடு ஏதும் வகுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக செய்தி தொடர்பாளரும், சமூக நீதி பேரவை தலைவருமான வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்துள்ள மனுவில்," தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022 பிப்ரவரி 28-ம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. கடந்த 9 மாதங்களாக தேசிய ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளதால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை.

அரசியல் சட்ட அந்தஸ்து பெற்றுள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பு செயலாளர் என்.எஸ்.வெங்கடேஸ்வரன் என்பவரின் பதில் மனு தாக்கல் செய்ய்ப்பட்டது. அதில், " ஆணைய உறுப்பினர்களின் பதவிக்காலம் மட்டும்தான் வரையறுக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களின் பதவி காலம் முடிந்த பிறகு அடுத்ததாக நியமிக்கப்பட வேண்டியவர்களை தேர்ந்தெடுப்பதற்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பிற்டுத்தப்பட்டவர்களின் நலனுக்காக சுயபலமற்று பணியாற்றவர்களைக் கண்டறிவது, சமூக அரசியல் ரீதியாக அவர்களின் பணி உள்ளிட்ட கருத்தில் கொண்டு தான் ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோரை நியமிக்க முடியும். எவ்வளவு குறிப்பிட்ட காலத்திற்குள் நியமிக்க முடியும் என்று வரையறுக்க முடியாது. ஆணைய உறுப்பினர்களை நியமிப்பதற்கான பணிகள் தொடங்கி இருப்பதாகவும் விரைவில் நிறைவடையும்" என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது மனுதாரரான வழக்கறிஞர் கே.பாலு குறுக்கிட்டு," 24 மணி நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையரை நியமிக்க முடிந்த மத்திய அரசால், பத்து மாதங்களாகியும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஏன் நியமன செய்ய முடியவில்லை?" என கேள்வி எழுப்பினார். அத்துடன்," ஆணைய காலியிடங்களை மத்திய அரசு உடனடியாக நியமிக்க உத்தரவிடவேண்டும்" என கோரிக்கை வைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை டிச. 7-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in