அரசுக்குப் போட்டியாக இயங்கிய தனியார் அலுவலகங்கள்: லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் அதிர்ச்சி தகவல்

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுஅரசுக்குப் போட்டியாக இயங்கிய தனியார் அலுவலகங்கள்: லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 60-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர்  நேற்று திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனைகளில் கிடைத்தது என்ன என்பதை குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை, நாகை, பொன்னேரி, தேனி, அரக்கோணம்,நாகை, சேலம், திருப்பூர், ஈரோடு, கடலூர், கோவை  உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் சிலவற்றில் முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவலின் பேரில்   ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து நேற்று அதிரடி சோதனையை நடத்தியது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலங்களான பத்திரப்பதிவு துறை, போக்குவரத்துத்துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகம், வணிகவரித்துறை, வருவாய்த்துறை சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சார்பதிவாளர் அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் சார்ந்த 60 அலுவலங்களில் இந்த சோதனை நடந்தது.

இந்த சோதனையில் கிடைத்தவைப்பற்றி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரப்பூர்வமான வெளியிட்ட தகவல்படி  'சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.33,75,773/- கைப்பற்றப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.1,79,000/- கூகுள் பே மூலம் தனிநபருக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது. 

ராமநாதபுரம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (தெற்கு அலுவலகத்தில் மின் சேவைக்கு கட்டணம் வசூல் செய்த கணக்கில் பணம் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது

கடலூரில் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதில் மனை பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவது சம்பந்தமான பணிகளை மேற்கண்ட மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே கடலூர் நகரமைப்பு அலுவலகத்திற்கு இணையான தனியார் அலுவலகங்கள் இயங்கி வருவதும், அரசாங்க அலுவலகத்தில் செய்ய வேண்டிய பணிகள் மேற்கண்ட தனியார் நிறுவனங்களில் நடைபெற்று வருவதும் அரசு ஆவணங்கள் மேற்படி தனியார் வசம் இருப்பதும் கண்டறியப்பட்டு விசாரனைக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவற்றைபோல் மேலும் சில முறைகேடுகள் இந்த திடீர் சோதனையில் கண்டறியப்பட்டு முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளன' என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in