திருநெல்வேலியில் வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த சில மணிநேரமாக சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நெல்லை நில எடுப்புப் பிரிவில் வட்டாட்சியராக இருப்பவர் சந்திரன். இவர்மீது ஏராளமான லஞ்சப் புகார்கள் தொடர்ந்து சென்றது. இதனைத் தொடர்ந்து இன்று மாலையில் திருநெல்வேலி சிப்காட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை மூன்று மணிநேரத்திற்கும் மேல் நடைபெற்றது. இதில் தாசில்தார் சந்திரன் வீட்டில் இருந்து 30 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. சந்திரன் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக முறையான தகவல்கள், வருவாய் ஆதாரம் காட்டாத நிலையில் அவை கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திருநெல்வேலியில் நில எடுப்பு வட்டாட்சியர் இல்லத்தில் நடந்த இந்த வருமான வரி சோதனை வருவாய்த்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.