மதுரை மீனாட்சியம்மன் உள்பட 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

மதுரை மீனாட்சியம்மன் உள்பட 3 கோயில்களில்  நாள் முழுவதும் அன்னதானம்: திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவர் திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டமாகும். தற்போதைய திட்டத்தில் 754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. திட்டத்தினை விரிவுபடுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 16.9.21-ம் ஆண்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானk; வழங்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

2022-2023-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையின் போது நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கெனவே ஐந்து திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில். திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மேற்குறிப்பிட்ட மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் திருக்கோயில்களில் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்று பயன்படுவார்கள். திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் பதப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்பு சான்றிதழ் அனைத்து முதுநிலை திருக்கோயில்களில் உள்ள 314 திருக்கோயில்களுக்கு பெறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in