சென்னையில் பைக் சாகசம் செய்த ஆந்திர வாலிபர்: நூதன தண்டனை வழங்கிய நீதிபதி

சென்னையில் பைக் சாகசம் செய்த ஆந்திர வாலிபர்: நூதன தண்டனை வழங்கிய நீதிபதி

சென்னையில் பைக் சாகசததில் ஈடுபட்ட வாலிபருக்கு, நூதன தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை அண்ணாசாலையில் கையில் விழிப்புணர்வு பதாகையுடன் நின்று வாகன ஓட்டிகளுக்கு பிரசுரங்களை வழங்கினார் இளைஞர்.

சென்னை அண்ணாசாலையில் கடந்த 8-ம் தேதி இரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த முகமது ஹாரிஸ்(19) மற்றும் முகமது சைபான்(19) ஆகியோரை பாண்டிபஜார் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவர் ஹைதராபாத்தை சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினோய் என்பதும் பைக் சாகசங்களில் ஈடுபடும் இவரை 14 ஆயிரம் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதும் தெரியவந்தது. மேலும் பைக் சாகசத்திற்கு பயன்படுத்தியது பைக் இவரது நண்பருடையது என தெரியவந்ததையடுத்து பைக் எண்ணை வைத்து ஹைதராபாத்தில் இருந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5 நபர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவான பினோய் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, திங்கட் கிழமை (இன்று) மட்டும், காலை 9.30 மணி முதல் 10.3 0மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட சிக்னலில் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரசுரங்கள் வழங்க வேண்டும் என்றும், செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் 12 மணி வரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்ற வேண்டும் என்றும், அதேபோல மூன்று வாரங்களுக்கு பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நூதன தண்டனை வழங்கி பினோயிற்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று காலை 9.30 மணி முதல் பினோய் அண்ணாசாலை தேனாம்பேட்டை சிக்னலில் சாலை பாதுகாப்பை மதிக்க வேண்டும், பைக் சாகசங்கள் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பலகையை வைத்து கொண்டு வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதேபோல அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in