தொடர்ந்து அழுதுக் கொண்டிருந்த 3 மாத குழந்தையின் மீது ஆத்திரம்: தந்தை செய்த வெறிச்செயல்

தொடர்ந்து அழுதுக் கொண்டிருந்த 3 மாத குழந்தையின் மீது ஆத்திரம்: தந்தை செய்த வெறிச்செயல்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சுகபிரம்ம ஆசிரமம் அருகே இருக்கும் வாட்டர் ஹவுஸ் காலனியில் வசிக்கும் நபர், தனது மூன்று மாத மகனை தூக்கி எறிந்து கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்டர் ஹவுஸ் காலனியில் வசிக்கும் அனில் மற்றும் அவரின் மனைவி சுவாதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் அந்த நபர் தனது மூன்று மாத குழந்தை நிகிலை தரையில் வீசினார். குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அழுது கொண்டிருந்தது, இதனால் கோபமடைந்த அவர் இந்த வெறிச்செயலை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாகப் பேசிய உள்ளூர்வாசிகள், "நான்கு நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அது தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. அனில் தனது மனைவி சுவாதியிடம் நிகிலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி சொன்னார். ஆனால் சிறிது நேரம் கழித்து அவர் தகராறு செய்யத் தொடங்கினார். குழந்தையின் தொடர் அழுகையால் கோபமடைந்த அவர் தனது மகனை தரையில் வீசினார். இதில் அந்த குழந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தது" என்று தெரிவித்தனர்

அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸாரை தொடர்பு கொண்டதுடன், குழந்தையை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிசுவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அனிலை கைது செய்துள்ளதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in