பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாளை (டிச.25) வரை அனைத்து ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் பொருத்தியுள்ள சென்சார் கருவியில் நேற்று அதிகாலை 2:31 மணியளவில் ரெட் அலர்ட் ஒலித்தது. இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம்-மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்சார் கருவி செயல்பாடுகளைக் கண்காணிக்கும் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் வரை ரயில்களை மண்டபத்தில் இருந்து இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதன்படி, டிச.23, 24-ல் சென்னை- ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்), டிச.24, 25-ல் ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரத்து செய்யப்படுகிறது. டிச.24, 25-ல் திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி, மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இதே காலத்தில் வாராந்திர விரைவு ரயில்கள் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரத்து செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சேவை ரயில் மட்டும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 93605 48465 அலைபேசி எண், மண்டபம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 93605 44307 என்ற அலைபேசி எண் செயல்படுகிறது.