திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து மஸ்கட்டுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஏற்பட்ட எந்திர கோளாறால் உடனடியாக தரையிறங்கியது. இதனால் 105 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து மஸ்கட்டுக்கு இன்று காலை 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் 105 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பதை விமானி அறிந்தார். இதையடுத்து உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து, காலை 9.15 மணிக்கு விமானம் மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
இதையடுத்து மாற்று விமானம் மூலம் பயணிகளை அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் 105 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.