குடியரசுத் தினவிழா: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

குடியரசுத் தினவிழா: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

குடியரசுத் தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு மற்றும் 6,800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வருகிற 26-ம் தேதி இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் சென்னை, காமராஜர் சாலை-வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5
அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், மொத்தம் 6,800 போலீஸார் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் சென்னை விமானநிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீஸார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்கள் சென்னையில் ட்ரோன்கள் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை
மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in