
ஹேர் டை வாங்கிய நபரிடம் கூடுதலாக ரூ.10 வாங்கிய நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள அழகு நாச்சியாபுரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் சென்னை சென்றிருந்தபோது அங்குள்ள மால் ஒன்றில் உள்ள கடையில் ஹேர் டை வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.29 என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அந்த கடைக்காரர் ரூ.39 வாங்கியுள்ளார்.
இது குறித்து துரைப்பாண்டி கடைகாரரிடம் கேட்ட போது அவர் அலட்சியமாக பதில் சொல்லியுள்ளார். இதையடுத்து ஊர் திரும்பிய துரைப்பாண்டி வழக்கறிஞர் மூலமாக அந்த கடைகாரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த கடைகாரர், தங்கள் கடையில் அதுபோல் நடக்கவில்லை எனவும், வேறு எங்கோ வாங்கிவிட்டு தங்கள் கடையில் வாங்கியதாக பொய் கூறுவதாக பதிலளித்துள்ளார்.
இதையடுத்து அந்த கடைகாரர் மீது சிவகங்கை நுகர்வோர் நீதிமன்றத்தில் துரைப்பாண்டி வழக்கு தொடுத்தார். 7 மாதங்கள் நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஹேர் டைக்கு கூடுதலாக ரூ.10 வாங்கி வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய சென்னையை சேர்ந்த கடைக்காரருக்கு அபராதமாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரமும், ஹேர் டைக்கு கூடுதலாக வாங்கிய ரூ.10 சேர்த்து மொத்தம் 30 ஆயிரத்து 10 ரூபாயினை மனுதாரருக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.