நரிக்குறவர், குருவிக்காரர் மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நரிக்குறவர், குருவிக்காரர் மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நரிக்குறவர், குருவிக்காரர் மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நரிக்குறவன், குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி கவனத்தை ஈர்த்து, முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-3-2022 அன்று கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், குருவிக்காரன் குழுவினருடன் இணைந்த நரிக்குறவன் சமூகத்தினரை, தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, ஒன்றியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் மத்திய அரசின் கடிதத்தின் மூலம் (எண் 12016/S/2011-C&LM-1, நாள் 30-4-2013) தெரிவித்திருந்ததை, பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965 -ம் ஆண்டிலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு 1967-ம் ஆண்டிலும், இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தன என்றும், நரிக்குறவர்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சமூகங்களில் ஒன்று என்றும், பழங்குடியினர் பட்டியலில் அவர்களைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்களாவார்கள் என்றும் தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பாக பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தும், இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்றும் எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, நரிக்குறவன், குருவிக்காரன் சமூகத்தினரை தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்தநிலையில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர்- குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in