விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆறுதல்: குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றார்!

விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆறுதல்:
குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றார்!

மதுரையில் விபத்தில் உயிரிழந்த ரவி ரசிகர் மன்ற தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் ஜெயம் ரவி உறுதியளித்துள்ளார்.

'ஜெயம்' திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமாகியவர் நடிகர் ஜெயம் ரவி, 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'பேராண்மை', 'தனி ஒருவன்' போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி திரைப்பட நட்சத்திரமாக திகழ்ந்து வரும் இவருக்கு தமிழகம் முழுவதிலும் ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது.

அஞ்சலி செலுத்திய நடிகர் ஜெயம் ரவி
அஞ்சலி செலுத்திய நடிகர் ஜெயம் ரவி

மதுரை மாவட்டம் நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளனர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜெயம் ரவியின் தீவிர ரசிகராகவும், அவரது ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்டத் தலைவராகவும் இருந்து வந்தார். இச்சூழலில், செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில், தனது புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் இருந்த நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகரின் மறைவு குறித்து செய்தி அறிந்து நேற்று மாலை மதுரை நிலையூரில் உள்ள செந்திலின் வீட்டிற்கு நேரில் சென்றார். செந்திலின் மனைவி மற்றும் இரு குழந்தைகளை சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார்
குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார்

மேலும், செந்திலின் குடும்ப வறுமையைப் போக்க ரூ. 5 லட்சத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாகவும், இரு குழந்தைகளுக்குமான கல்விச் செலவை முழுமையாக ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின் போது ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் ஷாம் சாக், செயலாளர் கார்மேகம், மாநில பொறுப்பாளர் தவசி ஆகியோர் உடனிருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in