ஏடிஎம்மில் இருந்து தப்பிய 7 லட்ச ரூபாய்: பிடிபட்ட போதை ஆசாமி வாக்குமூலம்

ஏ.டிஎம் இயந்திரத்தை உடைத்த குற்றவாளி கைது
ஏ.டிஎம் இயந்திரத்தை உடைத்த குற்றவாளி கைது ஏடிஎம்மில் இருந்து தப்பிய 7 லட்ச ரூபாய்: பிடிபட்ட போதை ஆசாமி வாக்குமூலம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரைப் போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் உள்ளது. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பஜார் வீதியில் உள்ள இந்த ஏடிஎம்மில் இரண்டு நாள்களுக்கு முன்பு கொள்ளை முயற்சி நடந்தது.

ஆனால், ஏடிஎம்மை உடைக்க முடியாததால் மர்மநபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுதொடர்பாக ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ்(32) என்பவர் தான் இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், “நான் குடிபோதையில் இருந்தேன். பணத்திற்கு ஆசைப்பட்டு ஏடிஎம்மை உடைத்தேன். ஆனால் அதை உடைக்க முடியவில்லை. அதனிடையில் ஆள்கள் வந்துவிட்டார்கள். இதனால் ஏடிஎம்மை விட்டு ஓடிவிட்டேன் ”என்றார்.

கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம்மில் அந்த சம்பவம் நடப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு 7 லட்சம் ரூபாய் பணம் நிரப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in