வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்த பின்னர் இரண்டு நாட்களில் அது தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கரையை நோக்கி நகரக்கூடும். அதன் விளைவாக வட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை 21 ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுதினம் 22 ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக 23 ம் தேதி வரையிலும் தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.