விபத்தில்லா புத்தாண்டு: சென்னை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்!

விபத்தில்லா புத்தாண்டு: சென்னை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்!

இந்த புத்தாண்டு உயிரிழப்பில்லா புத்தாண்டாக கொண்டாடுவதை நோக்கமாக வைத்து சென்னை காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது. அதன்படி 365 வாகன சோதனை சாவடிகள் அமைத்து 16 ஆயிரம் போலீஸார் களத்தில் இறங்கி தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புத்தாண்டில் சென்னையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கு மேல் யாரேனும் கூட்டமாக சென்றால், அவர்களிடம் விசாரணை நடத்தி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல் புத்தாண்டு இரவு விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது, இதில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், ரேஷ் டிரைவிங், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல் உள்ளிட்ட விதி மீறலில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 

காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னை வளசரவாக்கத்தில் நடந்த விபத்து ஒன்றைத் தவிர சென்னையில் விபத்தில்லா புத்தாண்டாக இந்த புத்தாண்டு அமைந்தது. சென்னை காவல்துறையின் சிறப்பான ஏற்பாட்டை பாராட்டும் வகையில் பொதுமக்கள் சென்னை காவல் துறை சமூக வலைதளப் பக்கத்தை இணைத்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் பாராட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை காவல்துறை சமூக வலைதள பக்கத்தில், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் விபத்து இல்லாத இந்த புத்தாண்டை கொண்டாடி இருக்க முடியாது என மக்களுக்கு நன்றி தெரிவித்து பதில் பதிவிட்டுள்ளனர்.

கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மூன்று விபத்துகளில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in