முக்கடல் சங்கமிக்கும் குமரியில் குவிந்த மக்கள் கூட்டம்: ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

முக்கடல் சங்கமிக்கும் குமரியில் குவிந்த மக்கள் கூட்டம்: ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை 4 மணி முதலே முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில் காணப்படுகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள் தொடர்ந்து கடற்கரை பரசுராம விநாயகரை வழிபட்டனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு ஏராளமான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன.

இதேபோல் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். குழித்துறையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு முன்னோர்களின் நினைவாக மரக்கன்று, அல்லது செடிகளை வாங்கி நடுவதும் வழக்கம். இதற்கெனவே குழித்துறை நகராட்சி சார்பில் வாவுபலி கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இங்கு செடி, மரக்கன்றுகளின் விற்பனையே பிரதானமாக இருக்கும். குழித்துறையிலும் இதனால் பக்தர்கள் கூட்டம் களைகட்டியது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, குழித்துறை உள்ளிட்ட தர்ப்பணம் கொடுக்கும் பகுதிகள் மட்டுமல்லாது, முக்கிய சுற்றுலாத்தலங்களிலும் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in