ஆவின் பால் வாங்கவும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: வெளியானது அடுத்த அறிவிப்பு

ஆவின் பால் வாங்க ஆதார் எண்
ஆவின் பால் வாங்க ஆதார் எண்ஆவின் பால் வாங்கவும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: வெளியானது அடுத்த அறிவிப்பு

மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இனி ஆதார் எண் கட்டாயம் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுத் துறை நிறுவனமான ஆவின் மூலம் நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 25 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் லிட்டர் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தியபோதிலும் மக்கள் அதன் தரத்தின் மீது நம்பிக்கை வைத்து விரும்பி வாங்குகின்றனர். பால் தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் அதிகாரிகள் மறுத்தாலும் பல நகரங்களில் பால் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் வேறு வழியின்றி தனியார் நிறுவனங்களின் பாலை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆவின் நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டைகளை சலுகையுடன் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. இவ்வாறு அட்டைகள் மூலம் பால் பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் புதிதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இதற்கான பணியை மேற்கொள்ளுமாறு மாவட்டம் தோறும் மண்டல வாரியாக உள்ள அலுவலர்களுக்கு ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

ஆவினின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒரு ஆதார் அட்டைக்கு தினமும் ஒரு லிட்டர் பால் மட்டுமே வழங்கப்படும் என்ற தகவலும் பரவுகிறது. சில குடும்பங்களில் உறுப்பினர்கள் அதிகம் இருக்கும்பட்சத்தில் பால் அதிகமாக வாங்க வேண்டும் என்றால் அதற்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாமா என கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து மதுரை ஆவின் பொதுமேலாளர் சாந்தி கூறுகையில்," ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் நேரடியாக ஆவின் நிறுவனத்தில் பணம் செலுத்தி அட்டையைப் புதுப்பிக்கின்றனர். இவர்களுக்கு அரை லிட்டருக்கு 50 பைசாவும், ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது. நுகர்வோருக்கு ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் ஆதார் எண்களைச் சேகரிக்கிறோம். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தாலும், அட்டைதாரர்களாக இணைந்து ஆதார் எண்களை வழங்கலாம். ஆவின் வாடிக்கையாளர் என்ற அடையாளத்துக்காக மட்டுமே ஆதார் எண்ணை சேகரிக்கிறோமே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே என யாரேனும் கூறினால் மக்கள் அதை நம்பவேண்டாம்" என்றார்.

இதுகுறித்து ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிர்வாகி கூறுகையில்."பால் கொள்முதல் குறைந்து வருவதற்குக் காரணம் ஆவின் கொள்முதல் விலை ரூ.36. இதில் விவசாயிகளுக்கு ரூ.33 தான் கிடைக்கிறது. ஆனால், தனியார் ரூ.48 வரை பால் கொள்முதல் செய்கின்றனர். இதனால், தனியாரைத் தேடி விவசாயிகள் செல்கின்றனர். கொள்முதல் விலையை உயர்த்தி பாலைப் பெறாமல் நுகர்வோருக்கு பால் கொடுக்காமல் தவிர்ப்பது எப்படி என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்த ஆதார் அட்டை கட்டாயம். இதேநிலை நீடித்தால் ஆவினுக்கு விவசாயிகள் யாரும் பால் வழங்கமாட்டார்கள்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in