பருவமழைக்கு முன்னதாகவே பெய்து வரும் தொடர் மழையால் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நிரம்பி வழியும் ஏரியை வேடிக்கைப் பார்க்கச் சென்றவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை வரும் 20-ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில் அதற்கு முன்னதாகவே வெப்பமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை தற்போதே அதே அளவில் பெய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் பரவலாக இந்த மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்றிரவு 7 மணிக்கு இடி, மின்னலுடன் தொடங்கிய மழை இரவு 9.30 மணி வரை விடாமல் வெளுத்து வாங்கியது. இதனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தும் ஓடியது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர். தீபாவளி விற்பனை களை கட்டியுள்ள நிலையில் பெய்துவரும் பலத்த மழையால் சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
துறையூர் அருகே ஒட்டம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மகன் நாகராஜ்(23). கேட்டரிங் படித்து விட்டு செங்கல்சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவர் நண்பர்களுடன் மகன்கள் நித்திஷ், பிரதீப் மற்றும் நண்பர்களுடன் நேற்று மாலை சிக்கத்தம்பூர் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிவதை பார்க்க சென்றார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் நாகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உப்பிலியபுரம் போலீஸார் நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.