
அண்ணனுடன் பைக்கில் சென்ற தங்கை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். எதிரே வந்த இருசக்கர வாகனம் உரசி கீழே விழுந்து பேருந்து ஏறி உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா(22). இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன்(23) உடன் இருசக்கர வாகனத்தில் ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகே வரும்போது முன்னாள் சென்ற மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு இருசக்கர வாகனம் உரசியதில் பின்னால் அமர்ந்து சென்ற பிரியங்கா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த மாநகர பேருந்து பிரியங்கா மீது ஏறிஇறங்கியதில் படுகாயமடைந்தார். இதில் அவரது அண்ணன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். தகவல் அறிந்து அங்கு வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் படுகாயமடைந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து பதிவு எண் இல்லாமல் விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற இருசக்கர வாகனத்தை தேடிவருகின்றனர்.